சென்னை:

குவைத்தில் பணியாற்றும் 40 ஆயிரம் இந்திய இன்ஜினியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குவைத்தில் ஆயிரகணக்கான இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் இந்திய இன்ஜினியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்ஜினியர்கள் குடியுரிமை மற்றும் பணி பர்மிட் பெற குவைத் சொசைட்டி ஆப் இன்ஜினியர்ஸ் (கேஎஸ்ஒஇ) அமைப்பில் கட்டாயம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு சாராத தனியார் அமைப்பிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் நேஷனல் போர்டு ஆப் அக்ரிடேஷன் (என்பிஏ) என்ற அமைப்பால் அங்கிகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயின்ற இன்ஜினியர்களுக்கு தான் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்று கேஎஸ்ஒஇ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள என்ஐடி, ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவை கூட என்பிஏ அமைப்பிடம் அங்கிகாரம் பெறவில்லை. இவை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மத்திய மனித வள மேம்பாட்டு துறை, யூஜிசி போன்றவற்றில் அங்கிகாரம் தான் பெரும்பாலான கல்லூரிகளில் உள்ளது.

இதனால் குவைத்தில் பணியாற்றும் 90 சதவீத இன்ஜினியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சுமார் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் இன்ஜினியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.