பள்ளி சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக மூவரை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த துக்காகவுண்டர் என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம்பார்த்து அங்கு சென்ற சுரேஷின் பெற்றோர் கோவிந்தன், ரங்கநாயகி ஆகியோர் ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அப்பகுதியில் உள்ள கோவிலில் மாணவியை சுரேஷ் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இதனையறிந்த பெண்ணின் உறவினர்கள் செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல்நிலை சீரான பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், சுரேஷ் மற்றும் அவரது பெற்றோர் ஆசை வார்த்தை கூறி தன்னை கடத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக ஓமலூர் காவல் நிலையத்தில் மாணவியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.