பிதாதி, கர்நாடகா

ரெயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற மூன்று சிறுவர்கள் ரெயில் மோதி மரணம் அடைந்தனர்.

செல்ஃபி மோகத்தினால் உயிரிழப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது என சமூக ஆர்வலர்கள் பலர் கவலை தெரிவித்தனர்.  பெங்களூரு அருகே குளத்தில் குளிக்கச் சென்ற நண்பர்கள் ஒரு நண்பன் முழுகுவதைக் கூட கவனிக்காமல் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது தெரிந்ததே.   தற்போது மூன்று சிறுவர்கள் செல்ஃபி மோகத்தால் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பிதாதி.   இங்கு மூன்று சிறுவர்கள் தண்டவாளத்தில் நின்றபடி ரெயிலுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர்.  செல்ஃபி எடுப்பதிலேயே கவனமாக இருந்த மூவரும் மிக அருகில் ரெயில் வந்ததை கவனிக்கவில்லை.  வேகமாக வந்த ரெயில் மோதி மூவரும் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் காலை 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் நடந்ததாக கூறப்படுகிறது.  ரெயில் அவர்களின் மேலேயே சென்றதால் மூன்று சிறுவர்களின் சடலங்களும் மிகவும் சிதைந்து சின்னாபின்னமாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.