திருவள்ளூர் :

காவல் நிலையம் வரும் பெண்களின் குழந்தைகளை  பாதுகாக்கும் வகையில்,  தனி அறை கொண்ட காவல் நிலையம் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.  இந்த காவல்நிலையங்கள், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள காவல்துறை அதிகாரி,  திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த  ஜனவரி மாதம் தற்போதுவரை கடந்த 10 மாதங்களில், பல்வேறு பிரச்சினை காரணமாக, 1269 பெண்கள் காவல்நிலையம் வந்துள்ளனர். இவர்களில், 640 பேர் தங்களது குழந்தைகளுடன் வந்து புகார் கொடுத்துள்ளனர்.

வழக்கு விசாரணைகளின்போது, அந்த பெண்களின் குழந்தைகள் பாதுகாப்பான முறையில்  இருக்கும் வகையில், காவல் நிலையத்தில், தனி அறைகொண்ட காவல்நிலையங்கள் அமைக்க,   திருவள்ளூர் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்புக் காவல் துறை பிரிவும்; இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற அமைப்பும் இணைந்து,  குழந்தைகள் விளையாடுவதற்கான தனி அறை கொண்ட காவல் நிலையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, தற்போது முதற்கட்டமாக  திருவள்ளூர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டையில் குழந்தைகளைப் பாதுகாக்கும் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இந்த  குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் காவல் நிலையங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சித்தலைவர், ”காவல் நிலையம் வரும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க மகளிர் காவல் நிலையத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் இடம், விளையாட்டு உபகரணங்கள் இருக்கின்றன என தெரிவித்தார்.

மேலும், திருவள்ளூவர் மாவட்டத்தில்,  கடந்த ஆண்டு 60 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த ஆண்டு இதுவரை  48 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.