உத்திரமேரூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை யில் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி  மூன்று வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரமேரூர் அடுகே உள்ள  களியாம்பூண்டி. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு பகல் எந்த நேரத்திலும் இரும்பு உருக்கப்பட்டு கம்பிகள் தயாரிக்கப்பட்டு வரப்படுகிறது.

எப்போதும்போல நேற்று இரவும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. அதனுள் இருந்து இரும்பு குழம்பு பட்டதில் சுமார் 8 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதில் அதிக பாதிப்படைந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாக்சூ, அகிலேஷ், சுரேந்தர் ஆகியோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர. மற்ற 5 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.