பம்பா,
நாளை திருக்கார்த்திகையையொட்டி சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருக்கார்த்திகை நாளன்று லட்சதீபம் ஏற்றப்பட்டு விசேஷ வழிபாடு நடைபெறும்.
கடந்த மாதம் 15ந்தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்  கோவில் நடை திறக்கப் பட்டது. 16-ந்தேதி முதல் மண்டல பூஜை நடந்து வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதோசம், நாளை திருக்கார்த்திகை, நாளை மறுதினம் பவுர்ணமி ஆகிய 3 நாட்களும்  விசேஷ நாட்களாகும்.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சாதாரணமாகவே  சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சபரிமலையில் கூட்டம் அதிகம் காணப்படும்.
நாளை திருக்கார்த்திகை விசேஷமான நாளாகும். இதையொட்டி ஏற்கனவே வந்துள்ள பக்தர்கள் அங்கேயே தங்கி நாளை அய்யப்பனை தரிசித்தபிறகே திரும்புவார்கள் என தெரிகிறது.
இதைதொடர்ந்து அய்யப்ப பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டு செய்து கொடுத்துள்ளது.
பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய 12 மணி நேரம் முதல் 15  மணி நேரம் வரை  ஆகிறது.
இதன் காரணமாக  பம்பையில் இருந்தே பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். நீண்டவரிசையில் பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

திருக்கார்த்திகையையொட்டி நாளை சபரிமலை சன்னிதானம் முதல் பம்பை வரை லட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடைபெறுகிறது.
எனவே விளக்கு ஒளியில் சபரிமலையே ஜொலிக்கும். மேலும் நாளை மாலை 5 மணிக்கு திரளி இலையில் கொழுக்கட்டை செய்து சுவாமி அய்யப்பனுக்கு படைத்து விசே‌ஷ பூஜையும் நடைபெறு கிறது.
கொழுக்கட்டை பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படும். இதனால் சபரிமலை வந்த பக்தர்கள் திரளி இலையை கொண்டு வந்து சன்னிதானத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் பம்பை ஆற்றில் எலுமிச்சை தீபத்தை மிதக்கவிட்டு அய்யப்ப பக்தர்கள் வழிபாடு நடத்துவார்கள்.