பெங்களூரு:

ள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும், திப்பு ஜெயந்தி ரத்து செய்யப்படும் என்று  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்து உள்ளார்.

திப்பு சுல்தான் கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து சில ஆண்டுகள் திப்புசுல்தான் பிறந்த நாளான நவம்பர் 10ம் தேதி, அரசு விழாவாக கர்நாடகத்தில் கொண்டாடப்பட்டது.

இதற்க பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கிலும், கர்நாடக உயர்நீதி மன்றம், திப்பு சுல்தான்,  சுதந்திர போராட்ட வீரரல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர் மட்டுமே!  என்று கூறியிருந்தது.

தற்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பா.ஜ.க எம்.எல்.ஏ வான அப்பாச்சுரஞ்சன் என்பவர்  திப்பு சுல்தானை சுதந்திர போராட்ட வீரரை போல சித்தரித்து பாடப்புத்தகங்களில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், திப்பு பாரசீக மொழியையே அவர் தமது ஆட்சி மொழியாக பயன்படுத்தியதாகவும். 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை மதம் மாற்றியதாகவும் குறிப்பிட்டு மாநில கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பாடநூல் நிறுவனத்திற்கு கல்வி அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,  பாட புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் தொடர்பான அனைத்து பாடங்களும் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  திப்பு சுல்தான் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதை தம்மால் ஏற்க முடியாது என்றும், திப்பு ஜெயந்தி நிகழ்ச்சி இனி ரத்து செய்யப்படும் என்றும்  கூறியுள்ளார்.