திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

இன்று தொடங்கிய பிரமோற்சவம் வரும் அக்டோபர் 1ந்தேதி வரை நடைபெறுகிறது. அன்று சக்கரத்தாழ்வார்  தீர்த்தவாரியுடன் புரட்டாசி பிரமோற்சவ விழா நிறைவுபெறுகிறது.

பிரமோற்சவத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் 500க்கும் மேற்பட் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.ஏழுமலையான தரிசிக்க நடந்து வரும் பக்தர்களின் வசதிக்காக   இன்று  முதல் வரும் அக்டோபர் 1ந்தேதி வரை முதல், இரண்டாம் மலைப் பாதைகள்  இரண்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான, கருட சேவை அன்று இரு சக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏதுவாக 4 இடங்களில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு உள்ளது.

கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

வெடி குண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக  ஆம்புலன்சுகள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும்.

பிரம்மோற்சவத்தை ஒட்டி லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், ஒன்பதரை கோடி ரூபாய் செலவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.