திருமலை,
திருப்பதி வெங்கடேச பெருமாளின் புரட்டாசி பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய 5வது நாள்  விழாவில் கருட சேவை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா … கோவிந்தா என் விண்ணதிர முழக்கமிட்டனர்.
garuda-seva
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11–ந்தேதி வரை 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா  நடைபெறும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு கருட வாகனத்தில் மலையப்பசாமி மாடவீதிகளில் பவனி வந்தார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, மாலை இருவேளைகளில் உற்சவர் மலையப்பசாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அதன்படி 5–ம் நாளான இரவு கருடசேவை நடந்தது.
மகா விஷ்ணுவின் வாகனம் கருடன் ஆகும். மகா விஷ்ணுவின் திருவடியை தாங்கி நிற்பவர் கருடன்.

எனவே கருடனை வழிபட்டால் மக்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தை பறந்து சென்று மகா விஷ்ணு காப்பார் என்பதை உணர்த்தவே உற்சவர் மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது கோவிந்தா.., கோவிந்தா… என பக்தர்கள் எழுப்பிய முழக்கம் பரவசத்தை ஏற்படுத்தியது.
நேற்று கருடசேவையை முன்னிட்டு சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் கருட சேவை நடைபெற்றது.