திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு எத்தனை குவாட்டர் வழங்கப்படும் என ஒலிபெருக்கி அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நிழற் குடையுடன் வரவேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், ஒருத்தருக்கு நான்கு குவாட்டர், நான்கு பீர் வழங்கப்படும் என ஒலி பெருக்கி வைத்து திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடை செய்யும் அறிவிப்பு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், போலீஸ் துணையுடன் டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் வட்டமிட்டும், மூங்கில் தடுப்புகள் அமைத்தும் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளார். அதன்படி டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்திருக்கும்போது குடை பிடித்து வந்தால்தான் மது வழங்கப்படும். அதேபோல் பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தடுப்புகள் அமைத்து 6 அடிக்கு ஒருவர் நிற்பது போல் கட்டைகள் கட்டி வட்டம் வரைந்து தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த முன்னேற்பாட்டில் பாதியையேனும் கோயம்பேட்டில் காட்டி இருந்திருக்கலாம் பெருந்தொற்று தவிர்த்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் வருதத்துடன் தெரிவித்துள்ளனர்.