திரினாமூல் காங்கிரஸ் கட்சி, கம்பெனியாக மாறி விட்டது’’ .பா.ஜ.க.வுக்கு தாவிய தலைவர் பாய்ச்சல்..

மே.வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான மந்திரி சபையில் அமைச்சராக அங்கம் வகித்த சுவேந்து அதிகாரி, மம்தாவின் வலது கரமாகவும் திகழ்ந்தார்.

மம்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா முன்னிலையில் பா.ஜ.க. வில் இணைந்தார்.

’’மம்தாவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தூங்கமாட்டேன்’’ என்று சூளுரைத்து மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுவேந்து அதிகாரி, நேற்று கொல்கத்தாவில் நடந்த பா.ஜ.க.. ஊழியர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர்,’’ திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் 21 ஆண்டுகள் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்’’ என குறிப்பிட்டார்.

‘’ஒழுக்கமான கட்சியாக இருந்த திரினாமூல் காங்கிரஸ், இன்றைக்கு ஒரு கம்பெனியாக மாறி விட்டது’’ என அவர் குற்றம் சாட்டினார்.

‘’மே.வங்கத்தில் பா.ஜ.க.வை வளர்க்க 135 தொண்டர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்’’ என குறிப்பிட்ட சுவேந்து அதிகாரி’’ மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி இருந்தால் தான் வளர்ச்சி பணிகள் நடைபெறும்’’ என தெரிவித்தார்.

-பா.பாரதி.