சென்னை: வேல்யாத்திரையின் 2வது நாளான இன்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந் நிலையில் நவம்பர் 6ம் தேதி தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் முருகன் உட்பட நிர்வாகிகள் பலரை திருத்தணியில் போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், தடையை மீறி இதே போன்று தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று முருகன் அறிவித்திருந்தார். இந் நிலையில் 2வது நாளாக பாஜகவின் வேல் யாத்திரை இன்று தொடங்கியது. சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு வரை யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் படி சென்னை திருவொற்றியூர்  வடிவுடையம்மன் கோயிலில் இருந்து வேல் யாத்திரையை தொடரவிருந்தார். இந் நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன், துணை தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.