கோயம்புத்தூர்

மிழக பாஜக தலைவர் எல் முருகன் பிரதமர் மோடிக்கு வெள்ளி வேல் பரிசாக அளித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல் முருகன் மாநிலம் எங்கும் வேல் யாத்திரை நடத்தினார்.  ஒவ்வொரு இடத்திலும் அதற்குத் தடை விதிக்கப்பட்டு அவர் பலமுறை கைது செய்யப்பட்டார்.   ஒரு சில முருகன் கோவில்களில் அவர் எடுத்துச் சென்ற வேலை பூஜை செய்வது ஆகம விதிகளுக்கு முரணானது என அப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி நேற்று கோவை விமான நிலையம் வந்து இறங்கினார்.  மோடியைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ  பன்னீர் செல்வம், மற்றும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

அப்போது பிரதமர் மோடிக்குத் தமிழக மாநில பாஜக தலைவர் எல் முருகன் வெள்ளி வேல் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.  அதன் பிறகு கோவையில் பிரதமர் மோடி ரூ. 12,400 கோடி மதிப்பிலான பல உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.   மேலும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.