சென்னை

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த மாதம் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் நடைபெற்றது.  அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதன் பிறகு 3 நாள் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்று 9ம் தேதி பேரவை கூட்டம் முடிவடைந்தது. கடந்த 20ம் தேதி இந்தாண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்  அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை தலைமை செயலகத்தில்  நாளை  காலை 10.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. இக் கூட்டத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள 2020-2021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. அறிக்கையை எந்த தேதியில் தாக்கல் செய்யலாம், இதில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்பன குறித்த முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவதால் அதனைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல், தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்துவது என்பன குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆகையால், நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.