சென்னை: பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி அவர்கள் உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பிரணாப் முகர்ஜி இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்து, சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராக மக்களவையிலும்,  மாநிலங்களவையிலும் திறம்பட செயலாற்றியவர்.

மேலும், இந்திய அரசின் உயரிய பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை பெற்று சிறப்புக்குரியவர் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவு இந்தியாவிற்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.