சேலம்

மிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசலில் ரூ.300 கோடி செலவில் நவீன கால்நடை பூங்கா ஒன்று அமைய உள்ளது.   இந்த கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.   இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினார்.  அந்த விழாவில் முதல்வர் உரையாற்றினார்.

முதல்வர் தனது உரையில், “தமிழக் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதுகாப்பான வேளாண் மண்டலங்கள் ஆக அறிவிக்கப்படுகிறது.   இந்த அறிவிப்பை டெல்டா விவசாயிகளின் துயரங்களைப் புரிந்துக் கொண்டதால் நான் அறிவிக்கிறேன்.  எக்காரணத்தைக் கொண்டு டெல்டா பகுதிகலில்ல் ஹைட்ரோ கார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதிக்காது.

அது மட்டுமின்றி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எவ்வித திட்டத்துக்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது.  விரைவில் காவிரி டெல்டா பகுதிகளைச் சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் நடவடிக்கைக்காகச் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற உள்ளோம்.  இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் இயற்றப்படும்” என தெரிவித்தார்.

இந்த சட்டத்தை வரவேற்ற தமிழக விவசாயிகள் சங்கம் இந்த சட்டத்தைச் சட்டப்பேரவையில் விரைவாக நிரைவேற்ற வேண்டும். எனவும் நடைபெற உள்ள தமிழக நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இந்த சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.