கோவை: கையில் வேல் எடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க தொடங்கிவிட்டன. அந்த வகையில் ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந் நிலையில் கோவை புலியகுளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் ஏந்தியது குறித்து விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் இன்று வேல் இருக்கிறது. ஸ்டாலின் தற்போது வேலை ஏந்திவிட்டதால் கடவுள் அவருக்கு வரம் அளிக்கமாட்டார். தேர்தல் மூலம் கடவுள் அவருக்கு தண்டனை தான் கடவுள் கொடுப்பார்.

அதிமுகவிற்குதான் கடவுள் வரம் கொடுப்பார். மக்களிடம் உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும். பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று கூறினார்.