சென்னை: பாசன வசதிக்காக பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையில் இருந்து வரும் 5ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 5.11.2020 முதல் 28.2.2021 வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள 802.93 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.