சென்னை: குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், குதிரையாறு அணையிலிருந்து இடது மற்றும் வலது பிரதானக் கால்வாய் மற்றும் பழைய பாசனப் பரப்பு ஆகியவற்றுக்கு 11.11.2020 முதல் 10.3.2021 வரை 120 நாட்கள் பாசன காலத்திற்கு உரிய இடைவெளியில் 90 நாள்களுக்கு, நாள் ஒன்றுக்கு 41 கன அடிக்கு மிகாமல் 228.10 மில்லியன் கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் 5231.59 ஏக்கர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 882.27 ஏக்கர் ஆக மொத்தம் 6113.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.