சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சட்டசபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், ஒரு குழு மார்ச் 21ம் தேதி அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து இன்று சட்டசபையில், சட்ட மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவ படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை வழங்க இந்த மசோதா வழிவகை செய்யும்.