தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தமிழகம் வெட்கப்பட வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது கலவரம் மூண்டது. காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பதினோரு பேர் பலியானார்கள்.

இந்த துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், “ சொந்த மக்கள் போராடியபோது கொன்றதற்கு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும். முதுகெலும்பு இல்லாத அரசுக்கு போராட்டக்காரர்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கவில்லையா ? மாவட்ட மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது” என்று  காட்டமாக பதிவிட்டுள்ளார்.