சென்னை,
எம்ஜிஆர் நினைவிடத்தை, இனிமேல் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நினைவிடம் என பெயர் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவையடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்றது. நேற்று காலை 11.30 மணி அளவில் நடைபெற்ற புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில், ஜெயலலிதா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துவிட்டு, பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.
அதில், முக்கியமாக மறைந்த ஜெயலலிதா திருவுருப் படத்தை சட்டசபையில் வைக்கவும், தற்போதுள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தின்  பெயரை மாற்றவும்  அமைச்சரவையில் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

நேற்று நடைபெற்ற  தமிழக அமைச்சரவை கூட்டத்துக்கு முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்பாராதவிதமாக 5.12.2016 அன்று இயற்கை எய்தியது குறித்து, தமிழகஅமைச்சரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வாடும் இலட்சோபலட்சம் இரத்தத்தின் இரத்தமான கழக உடன்பிறப்பு களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்நாடு அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மான விவரம்:
நம் அனைவரின் நெஞ்சில் நிறைந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை தமிழக சட்டமன்றப் பேரவையில் வைப்பது,
 பாரத ரத்னா விருது அளிப்பதற்கு மைய அரசுக்கு பரிந்துரைப்பது,
 நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா முழு திருவுருவ வெண்கல சிலை அமைக்க மைய அரசிடம் கோருவது,
ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூபாய் பதினைந்து கோடியில் நினைவு மண்டபம் அமைப்பது,
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை `பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம்` என பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.