சென்னை: எந்தப் பிரிவு பொறியியல்(பிஇ) படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகளும், பி.எட்., படிப்பை நிறைவுசெய்துவிட்டு, டெட் தேர்வை எழுதி தேர்ச்சிபெற்று, பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் அரசாணையில் தெரிவித்திருப்பதாவது; பி.இ. பொறியியல் படிப்பில் எந்தப் பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும், படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகள், அவர்கள் பி.எட்., மேற்கொண்டு நிறைவுசெய்து, பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வினையும் எழுதி, பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் கணித ஆசிரியராகப் பணியாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், பி.இ.பட்டதாரிகள் பி.எட்., படிப்பை மேற்கொள்ள மட்டுமே அனுமதி இருந்தது. அவர்கள் டெட் தேர்வை எழுத அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், இந்தப் புதிய அறிவிப்பின்படி அவர்கள் டெட் தேர்வை எழுதி தேர்ச்சிபெற்று, அரசுப் பள்ளிகளில் நடுநிலைப் பிரிவில் அரசு ஆசிரியராக அல்லது தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராக பணிபுரிய தகுதி பெறுகிறார்கள்.