சென்னை: பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்காக 15 லட்சம் லேப்டாப்கள் வாங்கும் தமிழக அரசின் முடிவால் நாட்டின் கணிப்பொறி சந்தை இரட்டிப்பு வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநில அரசின் எல்காட் நிறுவனத்திற்கும், லெனோவா நிறுவனத்திற்கும் 15.7 லட்சம் லேப்டாப்புகளை வழங்குவதற்கு ஏற்பட்டுள்ள ஒப்பந்தமானது, கடந்த ஏப்ரல் – ஜுன் 2019 வரையான காலகட்டத்தில், நாட்டின் கணிப்பொறி சந்தையை இரட்டிப்பு வளர்ச்சிக்கு இட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு காலகட்டத்தில், 108% வணிக கணிப்பொறி சந்தை வளர்ச்சியடைந்துள்ளதாக கூறும் புள்ளி விபரங்கள், விற்பனையின் அளவு 24.3 லட்சம் யூனிட்டுகள் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜுன் மாதம் முதல் பகுதியில், தமிழ்நாடு அரசாங்கம், லெனோவா இந்தியா நிறுவனத்திற்கு 15 லட்சம் லேப்டாப்புகளை தயாரித்து வழங்குவதற்கான ஆர்டர்களை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் ரூ.2000 கோடிக்கு மேல். கணிப்பொறி தொழில்துறையில் இதுவரை ஏற்பட்ட விற்பனை ஒப்பந்தங்களிலேயே இதுதான் மிகப்பெரிய ஒன்று என்று லெனோவா வட்டாரங்கள் கூறுகின்றன.