சென்னை:
47ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையிலான  17 நிறுவனங்களுடன் ரூ.15,128 கோடிக்கு தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்திந்துள்ள நிலையில், கோடிக்கணக்கானோர் வேலைகளையும் இழந்துள்ளனர். பல முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.  இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர் தொழிற்நிறுவனங்களை தமிழகத்திற்கு அழைக்கும் வகையில் தமிழக அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவும் அமைத்துள்ளது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 17 நிறுவனங்கள் , தமிழகஅரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களில், ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா ஜப்பான்  உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.  9 நிறுவனங்கள் நேரடியாகவும், 8 நிறுவனங்கள் காணொளி  மூலமாகவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின்  தமிழகத்தில் 47 ஆயிரத்து 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 ஒப்பந்தங்கள் விவரம்
1) காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 2,277 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Daimler India Commercial Vehicles நிறுவனத்தின், கனரக வாகனங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டம்;
2) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 1,300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பின்லாந்து நாட்டினை சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்தின், கைப்பேசி உதிரி பாகங்கள் தயாரிப்பு விரிவாக்க திட்டம்; உலக முதலீட்டாளர்கள் மாநாடு ? 2019ல் சால்காம்ப் நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்திட ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலால் ஒரே ஆண்டில் மீண்டும் ஒரு விரிவாக்க திட்டத்திற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு புத்துயிர் அளித்திட, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தொழில் துறை மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாக இந்த புதிய முதலீடு வரப்பெற்றுள்ளது.

3) காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 900 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Polymatech Electronics நிறுவனத்தின், Semiconductor Chips உற்பத்தி திட்டம்;
4) 350 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த Chung Jye Company Limited நிறுவனம் மற்றும் Aston Shoes Pvt Ltd நிறுவனத்தின் கூட்டு முயற்சியில், காலணிகள் உற்பத்தி திட்டம்;
5) காஞ்சிபுரம் மாவட்டம், மப்பேடு பகுதியில் 400 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த Lai Investment Manager Private Limited (Logos) நிறுவனத்தின், தொழிற்பூங்கா திட்டம்;
6) காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தென் கொரியா நாட்டைச் சேர்ந்த Mando Automotive India Private Limited நிறுவனத்தின் Casting Facility திட்டம்;
7) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த Dinex நிறுவனத்தின், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்;
8) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இந்திய-இங்கிலாந்து கூட்டு முயற்சியான Chennai Power Generation Limited நிறுவனத்தின், இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்;
அமெரிக்கா, பிரான்ஸ்
9) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிப்காட் செய்யாறு தொழிற்பூங்காவில், 18 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த IGL India Transplantation Solutions Pvt Ltd., நிறுவனத்தின் உறுப்புகள் பதப்படுத்தும் ரசாயன உற்பத்தி திட்டம்;
10) தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Vivid Solaire Energy Private Limited நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம்;
11) சென்னை, அம்பத்தூரில், 2,800 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த HDCI Date Centre Holdings Chennai LLP நிறுவனத்தின், தகவல் தரவு மையம் திட்டம்;
12) சென்னையில் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ST Tele Media நிறுவனத்தின் தகவல் தரவு மைய திட்டம்;
13) சென்னையில் 210 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Baettr நிறுவனத்தின், காற்றாலை உதிரி பாகங்கள் உற்பத்தி (Wind mill components) திட்டம்;
14) காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்காவில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 130 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சீன நாட்டைச் சேர்ந்த BYD India Private Limited நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டம்;
15) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள Mahindra Origins தொழிற்பூங்காவில், 46 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த TJR Precision Technology Company Limited நிறுவனத்தின் Precision Components உற்பத்தி திட்டம்;
16) காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் 15 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 20 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Pillar Industries India Pvt Limited நிறுவனத்தின், sealing materials உற்பத்தி திட்டம்;
17) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில், 12 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த Lincoln Electric நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் துவங்கும் திட்டம்;
மேற்கண்டவற்றில் முதல் 9 ஒப்பந்தங்கள் நேரடியாகவும், பிற ஒப்பந்தங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) காகர்லா உஷா, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாக்டர் அனீஷ் சேகர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.