சென்னை

மிழக முதல்வர் இரு மொழிக்கொள்கையே தொடரும் என அறிவித்ததை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி பாடத்திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.  இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்காது எனவும் இரு மொழிக் கொள்கையே தொடரும் எனவும் அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்றுப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவை பின் வருமாறு ;

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ”முதல்வருக்கு நன்றி. மத்திய அரசின் ‘மொழிக்கொள்கை’ மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல்வேறு தவறுகளைக் கொண்டது. இதைச் சுட்டிக்காட்டி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். இந்த அடிப்படையிலும் முதல்வர் பழனிசாமி தனது எதிர்ப்பை பதிவு செய்திட வேண்டும்” என அறிவித்துள்ளார்..

பாமக நிறுவனர் ராமதாஸ், ”இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதைத்தான் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மும்மொழிக் கொள்கையை அரசு நிராகரிக்கக் கூறியுள்ள அனைத்து காரணங்களும் 3,5,8-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கும் பொருந்தும். 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கை தொடரும் என்றும் மாநில அரசு அறிவிக்க வேண்டும்.” என அறிவித்துள்ளார்,

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ”தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். ” என அறிவித்துள்ளார்.

சமக தலைவர் சரத்குமார், ”புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையைத் தமிழகம் ஏற்காது எனவும், தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ” என அறிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ”புதிய கல்விக் கொள்கை அறிவித்துள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று முதல்வர் திட்டவட்டமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இறுதி வரை உறுதியான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகவே இது இருக்கவேண்டும். ” என அறிவித்துள்ளார்.