சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக தலைமைச் செயலாளராக கே.சண்முகம் 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். 60 வயதை எட்டியதால் ஜூலை 31ம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அக்டோபர் 31ம் தேதி வரை 3 மாதங்கள் பணி நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியது.

இதையடுத்து, மீண்டும் பணி நீட்டிப்பு  ஜனவரி 31ம் தேதி வரை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. இந் நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார்.

ஆகையால், தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று  கூறப்பட்டது. ஆனால், தற்போது டெல்லியில் பணியாற்றிய ராஜிவ் ரஞ்சன் மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆகையால், அவரே அடுத்த புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.