சென்னை: அதிமுகவை நிராகரிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்றும் தமிழகம் மீளும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தமிழகத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக சீரழித்த அதிமுக அரசின் ஊழல்களைப் பட்டியலிட்டுக் குற்றப் பத்திரிகையை பொதுமக்களிடம் வழங்கினார்.

மேலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி பொதுமக்களின் கையெழுத்து இயக்கத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அதிமுகவை நிராகரிப்போம் என்று கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர், கிராமசபைக் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

பத்து நாட்களில் 16 ஆயிரத்து 500 கிராமங்களில் கிராமசபை/வார்டு கூட்டங்களை திமுக நடத்துகிறது. இன்று, திருப்பெரும்புதூர் தொகுதியின் குன்னம் ஊராட்சியில் கலந்து கொண்டேன்!

அதிமுகவை நிராகரிப்போம் (#WeRejectADMK) எனத் தமிழகம் தயாராகிவிட்டது. கலந்துகொண்ட ஒவ்வொருவரின் ஆதரவிலும் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது! தமிழகம் மீளும்! என்று பதிவிட்டு உள்ளார்.