காவல்துறையில் இப்படியும் நல்லவர்கள்…

கடந்த மாதம் 29-ம் தேதி மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை ஒரு பெண் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவர் தான் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகக் கூறியுள்ளார்.  தனது  தாய் வசந்தா தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கொரோனா காரணமாக அவர்களை அழைத்து வர இயலவில்லை என்றும் கூறியுள்ளார்.  மேலும் தனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே எடுத்து வைத்துள்ளதால் அவரை சென்னை விமான நிலையம் வரை அழைத்துச் செல்ல உதவி தேவை எனக் கேட்டுள்ளார்.

உடனே மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பெண் காவலர் மகாலஷ்மி என்பவரிடம் விவரத்தைக் கூறி அந்த மூதாட்டிக்கு உதவுமாறு அனுப்பியுள்ளார்.  அந்த காவலர் மகாலஷ்மி நேரில் சென்று மூதாட்டி வசந்தா சுப்பிரமணியத்தைச் சந்தித்துள்ளார்.  அவரிடம் ஐதராபாத்திற்குச் செல்ல ஜுலை 1-ம் தேதிக்கு விமான டிக்கெட்டு உள்ளதை உறுதி செய்து கொண்டார்.  தொடர்ந்து அவரது உடைமைகள் மற்றும் பொருட்களை தயார் செய்ய உதவியுள்ளார்.  பின்னர் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்த தனியார் கார் மூலம் விமான நிலையத்தின் போர்டிங் வரை சென்று அம்மூதாட்டியை அவரது உடைமைகளுடன் பத்திரமாக விமானத்தில் செல்ல உதவியுள்ளார்.

மூதாட்டி வசந்தா நல்லபடியாக ஐதராபாத் வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் மூதாட்டியும் அவரது மகளும் பெண் காவலர் மகாலஷ்மிக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.  மேலும், பெண் காவலரின்  உதவியைப் பாராட்டி மூதாட்டியின் மகள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில், “நாங்கள் தமிழ்நாடு காவல் துறைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம், என்னுடைய தொலைபேசி அழைப்பின் மூலம், எனது 80 வயதான தாய்க்கு, சொந்த செலவில் கார் ஏற்பாடு செய்து விமானநிலையத்திற்கு அழைத்துச் சென்று உதவிய மாம்பலம் காவல் நிலைய காவலர் மகாலஷ்மிக்கு  மிக்க நன்றி”  என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

மூதாட்டியை அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றி விட உதவிய மாம்பலம் காவல் நிலைய பெண் காவலர் மகாலஷ்மியை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

காவல்துறையினர் மீது நம்பிக்கை குறைந்து வரும் இந்த சூழலில் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் அந்நம்பிக்கையை துளிர வைப்பதாக உள்ளது.

– லெட்சுமி பிரியா