சென்னை:

வாக்காளர் அட்டையில் பிழை உள்ளவர்கள், அந்த பிழைகளை ஆகஸ்டு 16ந்தேதி முதல் திருத்தலாம் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

தமிழக மக்களுக்கு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாக்காளர் அடையாள அட்டையில் பல எழுத்துப்பிழைகள், பெயர் மாறுதல்,  புகைப்படம் மாறுதல் போன்று  ஏராளமான பிழைகள் உள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் குவிந்துள்ள நிலையில்,  வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி சாஹு,  வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்து,  ஆரோக்கியமான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும்  வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்காக வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வாக்காளர்களின் படங்கள் தவறான இருத்தல், மோசன படங்கள், பழைய படங்கள் போன்றவை மாற்றலாம்.  வரும் 16ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும்  வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் மூலம் வாக்காளர் அட்டையில் புகைப்படம், பிறந்த தேதி, முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவற்றை வாக்காளர்கள் மேற்கொள்ள முடியும்.

1950 என்ற வாக்காளர் உதவி மைய தொலைபேசி எண், NVSP தேசிய வாக்காளர்  இணையதளம் மற்றும் அரசு இசேவை மூலம் இந்த திருத்தங்களை  வாக்காளர்கள் மேற்கொள்ள முடியும்.  இதற்காக பிரத்யேக செயலியை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது என்று தெரிவித்தார்.

வாக்காளர் அடையாள அட்டையில்  மாற்றங்கள் செய்து புதிய வாக்காளர் அட்டை பெற 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியவர்,  புதிய வாக்காளர்கள்  கட்டணமில்லாமல் புதிய வாக்காளர் அட்டை வாங்கலாம் என்றும் கூறினார்.

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின்போது வாக்காளர்களின் மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரி பெறப்படவுள்ளதால், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படும்போதோ, சேர்க்கப்படும் போதோ அதன் விவரம் சம்பந்தபட்ட நபரின் மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ள வாக்குப்பதிவு மையங்களை ஆய்வு செய்து, கூடுதல் மையங்கள் தேவைபடுகிறதா அவ்வாறு இருப்பின் அவற்றை உருவாக்குவது, பூத் சிலிப்பு வழங்கும் பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதலுக்கான சிறப்பு முகாம்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, வரும் ஜனவரியில் புதிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு  சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.