தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பிரசித்தி பெற்ற சபரிலை ஐயப்பன் கோயிலில் இரண்டு மாதங்கள் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு கால பூஜைகளை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டது. கோயில் நடை திறந்தது முதல் இதுவரை சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வந்ததாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மண்டல கால பூஜை தொடங்கி முதல் நாளிலேயே ரூ.3.30 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்ததாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். இது கடந்தாண்டை ஒப்பிடும்போது, தற்போது கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பக்தா்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. நீலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் வசதிக்காகத் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட நிலையில், “சபரிமலைக்கு தமிழகத்தில் இருக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், பிளாடிக் பொருட்களை, பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டாம். சபரிமலையை புனிதமாக, சுத்தமாக வைத்திருக்க, ஐயப்ப பக்தர்கள் உதவிட வேண்டும்” என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவுருத்தியுள்ளது.