சென்னை: இந்தாண்டின் ஜுன் & ஜூலை மாதங்களில் நடத்தப்படவிருந்த டிஎன்பில் தொடரின் 5வது சீசன் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது டிஎன்பில் தொடர். இத்தொடரில், சேப்பாக்கம், மதுரை, கோவை, திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி உள்ளிட்ட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதுவரையான நான்கு தொடர்களில், சேப்பாக்கம் இரண்டு முறையும்(2017 & 2019), மதுரை(2018) மற்றும் தூத்துக்குடி(2016) அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தன.
ஆனால், கொரோனா அச்சம் காரணமாக, இந்தாண்டு ஏராளமான விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரை, வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதா? அல்லது ரத்துசெய்வதா? என முடிவெடுக்கப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.