சென்னை: குரூப் 4 தேர்வு விடைத்தாள்களை வாகனத்திலேயே திருத்தி மாற்றியதை போன்று, குரூப் 2ஏ தேர்வின்போதும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தினமும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துக் கொண்டு இருக்கின்றன. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்துள்ளனர்.

அதில், குரூப் 2ஏ தேர்வு மோசடி வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. விசாரணையில் நாளுக்கு நாள் புதிய, புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் வாகனத்தில் திருத்தப்பட்டு மாற்றியதை போன்று குரூப் 2ஏ தேர்வின்போதும் பின்பற்றப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மையத்தில் எழுதப்பட்ட விடைத்தாளை சென்னைக்கு கொண்டு சென்ற போது, வழியில் வாகனத்தில் அந்த தாள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

விடைத்தாளில் நீல நிற மையால் எழுதப்பட்ட விடைத்தாளை இடைத்தரகர் ஜெயகுமார் தரப்பினர் கறுப்பு மையால் திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே குரூப் 2ஏ தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்ட சிவகாசி சித்தாண்டியின் சகோதரர் உள்பட அரசு ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.