சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில் சித்தாண்டி மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட  குரூப் 4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட இதுவரை 14 பேர் கைதாகினர்.

முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசு பணி  தேர்வெழுத தடை விதிக்கப் பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபோல குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதுதொடர்பாக, சிவகங்கை காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்தது.

காவலர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், போலீசார் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சிவகங்கைக்கு நேரில் சென்றபோது காவலர் சித்தாண்டி தலைமறைவானார்.

அவரது சகோதரரும், காரைக்குடி சார்-பதிவாளருமான வேல்முருகனிடம், சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 2018-ம் ஆண்டு குரூப் 2 ஏ தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேட்டில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வரும் சித்தாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுச் சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.