டில்லி

பாஜக இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவு அடைந்துள்ளதையொட்டி பிரதமர் மோடி மக்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் 30 ஆம் தேதி பாஜக இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தது.  இன்றுடன் முதல் ஆண்டு முடிந்து 2 ஆம் ஆண்டு தொடங்குவதைச் சிறப்பாக கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.  கொரோனா தாக்குதல் காரணமாக அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாஜக ஆன்லைன் மூலம் கொண்டாட உள்ளது.  முதல் ஆண்டு நிறைவை ஒட்டி பிரதமர் மோடி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் மோடி, “2-வது முறையாக பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் முதலாம் ஆண்டு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் நான் வழக்கமாக மக்கள் மத்தியில் இருந்திருப்பேன். தற்போதுள்ள கரோனா சூழல், ஊரடங்கு போன்றவற்றால், அதற்கு வாய்ப்பில்லை என்பதால் மக்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்.

சென்ற ஓர் ஆண்டில் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்துவதற்காக என்னுடைய அரசு பல வரலாற்று முடிவுகளை எடுத்திருந்தது.  ஆயினும் பல்வேறு சவால்களையும், பிரச்சினைகளையும் நாடு சந்தித்து வருவதால், ஏராளமான செயல்கள் செய்ய வேண்டிய தேவை இருந்தது

இரவு பகலாக நான் பணியாற்றி வருகிறேன்.  எனது செயல்பாடுகளில், என்னுள் குறைபாடுகள் இருக்கலாம். ஆயினும் நாட்டில், எந்த விதத்திலும் குறைபாடுகள் இல்லை. உங்களை (மக்களை) நான் நம்புகிறேன், உங்களது வலிமை, திறமை போன்றவற்றை என்னை நம்புவதைவிட அதிகமாக நம்புகிறேன்.

கொரோனா வைரஸால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் நம்முடைய தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கலைஞர்கள், சிறு,குறுந்தொழிலில் பணியாற்றும் ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள், மக்கள் அனைவரும் பெரிய துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர்.  நாங்கள் அவர்களின் துன்பத்தை ஒழிக்க ஒற்றுமையாக, தீர்மானத்துடன் பணியாற்றி வருகிறோம்.

தற்போது நீங்கள் சந்திக்கும் அசவுகரியங்கள் அனைத்தும் பேரழிவுகளாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொரோனா வைரஸைத் தடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளை, வழிகாட்டி நெறிமுறைகளை ஒவ்வொருவரும் உணர்ந்து கடைப்பிடிப்பது முக்கியம்.  இப்போது வரை மக்கள் பொறுமையுடன் இருக்கிறார்கள், இது தொடர வேண்டும்

உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த பொறுமைதான் முக்கியக்காரணம். கொரோனாவுக்கு எதிராக நாம் மேற்கொண்டிருப்பது நீண்டகாலப் போர் ஆகும், இந்த போரில் வெற்றிப்பாதையில் நாம் பயணித்து வருகிறோம், வெற்றிதான் நம்முடைய கூட்டுத்தீர்மானம்.

இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதார சீரழிவிலிருந்து எவ்வாறு மீளும் என்பது கொரோனா ஒழிந்தபின் பரவலாக விவாதிக்கப்படும். கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒற்றுமையையும், அதை ஒழிக்க நடத்தும் போராட்டத்தையும் வெளிப்படுத்தி உலகை இந்தியா வியக்க வைத்துள்ளது. விரைவில் பொருளாதார மறுமலர்ச்சிக்கும் இதேபோன்ற உதாரணமாக இந்தியா உருவாகும் என உறுதியாக நம்புகிறேன்.

இந்த நேரத்தில் தற்சார்பு பொருளாதாரம் என்பது அவசியமானதாகும். நம் சொந்த திறமையால் நமக்கான பாதையில் நகர்ந்து வருகிறோம், இதுதான் தற்சார்பு பொருளாதாரம். இதற்கு ரூ.20லட்சம் கோடி நிதித்தொகுப்பை மத்திய அரசு அறிவித்தது  இது தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான முக்கிய அறிவிப்பாகும்.

இந்த தொடக்கம் ஒவ்வொரு இந்தியருக்கும் புதிய வாய்ப்பை ஏற்படுத்தும், நமது விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய தொழில்முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் இந்த காலகட்டம் நெருக்கடியானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அத்துடன் இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என அனைவரும் உறுதியான தீர்மானம் கொள்ள வேண்டும்.

நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் தற்போதைய மற்றும் எதிர்காலம் துன்பத்தால் சூழ விடப்பட மாட்டாது என்பதைக் கண்டிப்பாக நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் நாம்தான் முடிவு செய்வோம்.  நாம் நம்முடைய வளர்ச்சி, வெற்றியை நோக்கி முன்னேறுவோம்.  நமது ஒரு கையில் கடமையை உணர்ந்து செயல்பட்டால் மறு கையில் வெற்றி உறுதியாக வந்து சேரும்.

தற்போது  நாடாளுமன்றத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அதிகரித்துப் பல சாதனைகள் நடந்துள்ளன,  பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.எங்கள் அரசின் கொள்கைகள், புதிய முடிவுகள் மூலம் கிராமப்புறம்-நகரங்களுக்கு இடையிலான இடைவெளி சுருங்கியுள்ளது.  நாட்டில்  முதல்முறையாக நகர்ப்புற மக்களைவிடக் கிராமப்புற மக்கள் 10 சதவீதம் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

மக்களாகிய நீங்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவினால் 2019-ம் ஆண்டு தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். சென்ற ஆண்டு இதேநாள் இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு பொன்னான சகாத்பம் தொடங்கிய நாள் ஆகும். பல 10ஆண்டுகளுக்குப்பின் மக்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஒரே அரசைத் தேர்வு செய்தார்கள்.

மக்கள், நாங்கள் ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதற்காக மட்டும் வாக்களிக்காமல், இந்தியாவை உலகத்தின் தலைவனாக மாற்ற வேண்டும், புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் கனவை நிறைவேற்றவும் வாக்களித்தார்கள்.

நாங்கள் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கிய 370 பிரிவை நீக்கியது தேசத்தின் ஒற்றுமை மற்றும்  ஒருமைப்பாட்டின் உணர்வை வெளிப்படுத்தியது.  உச்சநீதிமன்ற அயோத்தி ராமர் கோயில் வழக்கில் அளித்த தீர்ப்பு நூற்றாண்டு காலம் நீடித்து வந்த சிக்கல்களுக்கு ஒரு தீர்வாக அமைந்தது.

பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த காட்டுமிராண்டித்தனமான முத்தலாக் முறை வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டது.  அடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தில் திருத்தம் இந்தியாவின் இரக்கம் மற்றும் முழுமைத்தன்மையை காட்டியது” என தெரிவித்துள்ளார்.