கோவா:

ஜூலை மாதம் கோவாவிலுள்ள குலேலியில் ஐஐடிக்கான நில ஒதுக்கீடு செய்ய போவதாக கோவா அரசு அறிவித்திருந்தது. கோவாவிலுள்ள ஃபார்மகுடி என்ற கிராமத்தில் தற்போது பொறியியல் கல்லூரியுடன் இடத்தை பகிர்ந்து கொள்கிறது.

ஐஐடி வளாகதை நிர்மாணிக்க 10 லட்சம் சதுர மீட்டர் இடத்தை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது, ஆனால் தற்போது குலேலி மக்கள் ஐஐடி வளாகத்தை நிர்மாணிக்க மறுத்ததால், அவர்களை சமாதானப்படுத்த அந்த இடத்தில் 45 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை மத செயல்பாட்டுக்காக ஒதுக்கப் போவதாக நேற்று கோவா அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஏழு வருடத்தில் ஐஐடி வளாகம் அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் இடம் இதுவாகும். இதற்கு முன் கோவாவில் உள்ள சங்குஹெம் மற்றும் கன்கோனா என்ற இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்குள்ள மக்கள் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் தற்போது குலேலி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் குலேலி மக்களும் ஐஐடி வளாகம் நிர்மாணிக்க மறுப்பதால் அவர்களுக்கு 45,000 சதுர மீட்டர் நிலத்தை மத செயல்பாடுகளுக்காக அளிக்கப்போவதாக நேற்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். மேலும் அவர் இது முழுக்க முழுக்க கிராமவாசிகளின் நலனுக்காகவும் அவர்களை சமாதானப்படுத்தும் எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதைப்பற்றி அந்த தொகுதியின் எம் எல் ஏவாக இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே கூறுகையில்: அப்பகுதி மக்களுக்கு ஐஐடிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துடன் சில மத உணர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன, ஆகையால் தான் அவர்கள் இங்கு ஐஐடி வளாகம் அமைக்க மறுத்தனர், ஆனால் தற்போது அவர்களுக்கான மத செயல்பாடுகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததால், இனி ஐஐடி வளாகம் அமைக்க எவ்வித இடையூறும் இருக்காது என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.