டில்லி,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டையை இலையை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அக்டோபர் 5-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுக-வில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

அதைத்தொடர்ந்து அதிமுக மற்றும்  இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.

இதற்கிடையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடர்ந்த வழக்கில் விரைவில் முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, மதுசூதனன், பன்னீர் செல்வம், வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:

இரட்டை இலை சின்னம் சர்ச்சை தொடர்பாக புதிதாக ஆவணங்கள் தாக்கல் செய்ய விரும்பி னால் செப்டம்பர்.29-ம் தேதிக்குள் தகுந்த ஆதாரங்களுடன் தாக்கல் செய்யலாம். அதன் நகலை எதிர் தரப்புக்கும் அளிக்க வேண்டும்.

இந்த ஆவணங்களில் கட்சியின்,எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட வேண்டும். மேலும், 2016 டிச.5-ம் தேதியன்று கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியலை அவர்களது ஒப்புதலுடன் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் அனைத்தையும் செப்டம்பர்.29-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் அக்டோபர்.5-ம் தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடக்கும்.

அதில் நேரிலோ அல்லது அத்தாட்சி பெற்ற வழக்குரைஞர்களோ பங்கேற்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதையடுத்து இரட்டை இலை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.