டில்லி,

திமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்று இறுதி விசாரணை செய்ய இருக்கிறது.

ஏற்கனவே நடைபெற்ற பல கட்ட விசாரணையை தொடர்ந்து இன்று மாலை இறுதிக்கட்ட விசாரணை நடைபெற உள்ளது. இதையடுத்து, முடக்கப்பட்ட இரட்டை இலையை எந்த அணிக்காவது ஒதுக்குமா அல்லது மீண்டும் முடக்குமா என்பது தெரிய வரும்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் அணி,  சசிகலா அணி என அதிமுக பிளவுபட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கேட்டதால் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

அதைத்தொடர்ந்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகள் இணைந்த பின் இரட்டை இலை சின்னத்தை, தங்கள் அணிக்கு தர வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இது தொடர்பான பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையில்  டிடிவி தினகரன் அணியினரும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்தனர். இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில்   தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தலைமையில் நடந்து வருகிறது.

ஏற்கனவே முதல்கட்ட விசாரணை கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட விசாரணை கடந்த 13-ம் தேதியும் , மூன்றாம் கட்ட விசாரணை கடந்த  23-ம் தேதியும்  நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு விசாரணையின்போது முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை நீண்டுகொண்டே செல்வதால் இன்று (30ந்தேதி) இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இன்று மாலை 3 மணி அளவில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்க உள்ளது. அதைத்தொடர்ந்து இரட்டை இலையை எந்த அணிக்கு ஒதுக்குவது என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.