புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக 80 பேர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளது.  இன்று ஒருவர் பலியானதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  இதுவரை 19 ஆயிரத்து 560 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 18 ஆயிரத்து 375 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளது. 296 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது.
“புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 480 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு வந்துள்ளது. அதன்படி,  புதுச்சேரியில் 76 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் 2 பேர் என மொத்தம் 80 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுஉள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 904 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 485 ஆகவும் அதிகரித்துள்ளது.
இவர்களில்  ஆண்கள் 40 பேர், பெண்கள் 40 பேர் ஆவர். 18 வயதுக்கு உட்பட்டோர் 4 பேரும், 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டோர் 64 பேரும், 60 வயதுக்கு உட்பட்டோர் 12 பேரும் அடங்குவர்.
புதுச்சேரியில் கடந்த 105 நாட்களில் இது 2-வது அதிகபட்ச பாதிப்பாகும்.
இன்று, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.