இன்று ஆடி அமாவாசை தினம் கொண்டாடப்படுகிறது.

அமாவாசை என்பது இந்துக்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் தொடங்க உகந்த நாள் என கருதப்படுகிறது.   அமாவாசை அன்று முழுவதும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் சந்திரன் இன்றிலிருந்து வளர்வதாக ஒரு ஐதீகம்.  அதனால்தான் இதை வளர்பிறை என சொல்லப்படுகிறது.

இதில் ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற தினங்கள் மேலும் விசேஷ தினங்களாக கருதப்படுகிறது.  இதில் ஆடி அமாவாசையைப் பற்றி இங்கு பார்ப்போம்.

முக்கியமாக அமாவாசை அன்று நீத்தோர் கடனை செய்வது வழக்கம்.  இந்து சாஸ்திரப்படி, ஆடி முதல் தை வரையிலான காலம் வரை பித்ருக்கள் எனப்படும் நீத்தோர் நம்மைக் கண்டு ஆசி தெரிவிக்க பூலோகத்துக்கு வருகின்றார்கள்.  அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து கிளம்பும் நாள் இன்று.   அதனால் அவர்களை பூவுலுகுக்கு வரவேற்க இன்று தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

இதே போல மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.  அன்றுதான் அவர்கள் பூலோகத்துக்கு வந்து சேருகிறார்கள்.  அதே போல தை அமாவாசை அன்று பூலோக்கத்தில் இருந்து கிளம்பி பித்ரு லோகத்துக்கு செல்கிறார்கள்.  அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அதே போல் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.   அதனால் அம்மனுக்கு விரதம் இருந்து சிலர் தாலி நோன்பு இருப்பதுண்டு.  ஆடி அமாவாசை அன்று அம்மனுக்கு கூழ் வார்த்தால் ஆயிரம் வருடம் கூழ் வார்த்த புண்ணியம் கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு.

நாமும் ஆடி அமாவாசையை கொண்டாடி, ஆண்டவன் அருளும், பித்ருக்கள் ஆசியும் பெறுவோமாக..