சென்னை

சென்னை காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கொரோனா பரவலைத் தடுக்க சென்னை காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  இதையொட்டி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திங்கள் அதிகாலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது இன்று ஞாயிறு என்பதால் ஊரடங்கு அமலில் உள்ளது

இன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவ வாகனங்கள், அவசர மற்றும் அமரர் ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.  எனவே மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதும் தெருக்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவையின்றி  வாகனம் மற்றும் வாகனம் இன்றி வெளியே சுற்றுவோர் மீது குற்றவியல் நடைமுறைப்பிரிவு 144ன் கீழ் வழக்குப் பதியப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி நகரெங்கும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.