சென்னை:

போரூரில் சிறுமி, ஹாசினி கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்று(பிப்.,19) தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர், பாபு. அவரது மகள், ஹாசினி, வயது  6.

இந்த சிறுமியை, 2017 பிப்., 5ல், அதே பகுதியைச் சேர்ந்த, தஷ்வந்த், (வயது 24)  என்பவர் பாலியல் சித்ரவதை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதாக மாங்காடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், ஜாமின் பெற்று வெளியே வந்த தஷ்வந்த்  தனது தாய், சரளாவையும் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவரது தந்தையே, இக்குற்றச்சாட்டை தஷ்வந்த் மீது சுமத்தினார்.

தற்போது தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், தஷ்வந்துக்காக வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை. ஆகவே  தஷ்வந்தே வாதாடினார்.

இந்நிலையில், இந்த வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.