மிகவும் இளம் வயதிலேயே இந்தியப் பிரதமரானவர் ராஜிவ் காந்தி.  இன்று அவருக்கு 74ஆவது பிறந்த நாள் ஆகும்

இந்திரா காந்தி = ஃபெரோஸ் காந்தி தம்பதியினருக்கு முதல் மகனாக 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பம்பாயில் பிறந்தார்.    இவர் பிறந்து மூன்று ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் அடைந்தது.   முதல் பிரதமாராக இவரது தாய் வழி பாட்டனார் ஜவகர்லால் நேரு பதவி ஏற்றார்.    இவர் தந்தையும் தாயும் அரசியலில் மிகவும் புகழ் பெற்றவர்கள்.

குடும்பமே அரசியல் குடும்பமாக இருந்த போதிலும்,  ராஜிவ் காந்தி ஆரம்ப காலத்தில் இருந்தே அரசியலில் இருந்து விலகி இருந்தார்.   பள்ளிப்படிப்பை டூன் பள்ளியில் முடித்து விட்டு வெளிநாட்டில் படித்து வரும் போது, சோனியாவை சந்தித்து காதல் வயப்பட்டார்,    அவரது தாயார் இந்திரா காந்தியின் சம்மதத்துடன் டில்லியில் சோனியாவை மணம் முடித்தார்.

ராஜீவ் பிரதம மந்திரியின் மகனாக இருந்த போதும்,   இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பைலட் ஆக பணி புரிந்து வந்தவர்.    ஒரு முறை அவர் செலுத்திய விமானத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் பயணம் செய்ய இருந்தார்.   அதனால் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அந்த தலைவரிடம் ராஜிவ் காந்தி பைலட்டாக இருக்கும் விமானத்தில் நீங்கள் பயணம் செய்வீர்களா என கேட்டனர்.   ராஜிவ் காந்திக்கு ஆட்சேபம் இல்லை எனில் எனக்கும் இல்லை என அந்தத் தலைவர் சொன்னார்.     விவரம் அறிந்த ராஜிவ் காந்தி விமானத்தை செலுத்தும் முன்பு அந்த தலைவரை சந்தித்து அளவளாவி விட்டு,  அவர் வயதில் மூத்தவர் என்பதால் அவர் கால்களை தொட்டு வணங்கினார்.   அப்போது அந்த தலைவர் இந்திரா காந்தியை கடுமையாக எதிர்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் தாயின் மறைவுக்குப் பின் மிக இளவயதில் பிரதமாரான ராஜிவ் காந்தி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பெண் மனித குண்டாக வந்து தன்னை வெடித்துக் கொண்டதில் பரிதாப மரணம் அடைண்டார்.