இன்று பங்குனி உத்திரம்

இன்று பங்குனி உத்திரம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் குலதெய்வத்தை வணக்குவது மிகவும் சிறப்பு. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அவர்களின் குல தெய்வ கோவில்களான  காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும், சாஸ்தா, அய்யனார்  கோவில்களுக்கு சென்று இன்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதேவகையில், இன்றைய தினம் முருகனுக்கும் சிறப்பான நாள். முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகவும்  கொண்டாடப்பட்டு வருகிறது.  பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினம் அன்றே பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

இன்றை யதினம்  ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் பல கடவுள்களை வணங்கினாலும்,  குல தெய்வத்தை வழிபடாமல், வேறு எந்த தெய்வத்தை நாடிச்சென்று வணங்கினாலும், குலதெய்வம் அணுக்கிரகம் இல்லையென்றால் புண்ணியம் இல்லை என்பது ஆன்மிகவாதிகளின்  நம்பிக்கை.

குல தெய்வ வழிபாடுதான் ஒருவருக்கு  100 சதவீத பலன்களை தர வல்லது. அந்த குல தெய்வம் தான் ஒவ்வொருவரையும்,  அவரது குலத்தையே பாதுகாக்கும்.குல தெய்வ வழிபாடு குறித்து, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், நோய்கள் நீங்கவும், பிள்ளை வரம் கிடைக்கவும், இயற்கை செழிக்கவும்  மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு.

ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பவுர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு பவுர்ணமியாகும். எனவே இந்த நாளில் குல தெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிக, மிக அவசியமாகும்.

மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும்.

பங்குனி உத்திர திருவிழா நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு.

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி,  சுவாமிமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட முருகக் கடவுளின்  அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  பழனியின் பிரசித்தி பெற்ற திருத்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருக்கிறார்கள்.

நற்பலன்களை தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதம் மிகவும் முக்கியத்துவமானது.  இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வீகத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் சொல்கின்றன.

தெய்வீக திருமணங்களான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தது இந்த பங்குனி உத்திதிர தினத்தில்தான்.

உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் ஆவார். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்துவது இரட்டைச் சிறப்பாகும்.

சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாளும் இதுதான்.‘

ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நிகழ்ந்தது.

பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் திருமண பாக்கியம் உடனே கிட்டும் என்பதும் ஐதிகம்.

உத்திரத் திருநாளான இன்று  ஒவ்வொருவரும்  கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்கி ஆசி பெறுங்கள்.