ன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாள் பழையவற்றையும் உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் ‘போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகி விட்டது.

அன்றைய தினம் வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்கள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும்.

இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

போகி பண்டைய காலத்தில் இந்திர விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. இது இந்திரனுக்காக கொண்டாடப்படும் பண்டிகை. இந்திரனைப் போல நாமும் மகிழ்ச்சியுடன் தினசரியும் போகம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.