டில்லி:
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த தாக்கல் செய்யப்பட இருக்கும் பொதுபட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டும் சேர்ந்து தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு வரம்பு உயருமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை பாராளுமன்றம் கூடியதும் ஜனாதிபதி பிரணாப் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து இன்று 2017- 2018ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்.

நாட்டில் முதல் முறையாக இந்த ஆண்டு பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைத்து தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு வரிச் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

மத்தியஅரசு பணமதிப்பிழப்பு அறிவித்ததை தொடர்ந்து பாஜ அரசு மீது பெரும்பான்மையான மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  மேலும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள்  நடைபெற உள்ளன.

இதன் காரணமாக மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெறலாம் என கருதப்படுகிறது. அதேபோல் தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்த கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் வற்புறுத்தி வருகிறார்கள்.

எனவே தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பு தற்போதுள்ள ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.