டில்லி,

ஜிஎஸ்டி வரி வசூல் நடைமுறைக்கு வந்தவுடன் பெரும்பாலான சோதனைச்சாவடிகள் மூடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் சோதனை சாவடி ஏற்படுத்தி வாகனங்களிடம் வரி வசூல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கால தாமதம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதன் காரணமாக சோதனை சாவடிகளை ஒழிக்க பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜி. எஸ் .டி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்தால் பல்வேறு சோதனைச் சாவடிகள் மூடப்படும் என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசியபோது, முதலில் கால்நடை வளர்ப்பு துறை, சுரங்கம் மற்றும் வனம் தொடர்பான சோதனைச் சாவடிகள் மூடப்படும் என்று கூறினார்.

முன்னதாக பேசிய வருவாய் செயலர் அஸ்முக் ஆதியா,

ஜி எஸ் டி வரி முறை நடைமுறைக்கு வந்தப்பிறகு ஒரு சில சோதனைச் சாவடிகளே திறந்திருக்கும். பெரும்பாலான சோதனைச் சாவடிகள் மூப்பட்டுவிடும்.

ஏனெனில் ஜி எஸ் டி வரிமுறையின் கீழ் பெரும்பாலான துறைகள் வந்துவிடுகின்றன. இதன் காரணமாக அந்தந்த துறைகளின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சோதனைச்சாவடிகள் விரைவில் மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.