சென்னை

நாளை நடிகர் ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களை மீண்டும் சந்திக்க உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களைக் கடந்த வாரம் சந்தித்தார்.  இந்த கூட்டம் சென்னையில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடந்தது.  அப்போது ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனைகள் நடத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இந்த சந்திப்பு தனக்குத் திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.  அந்த ஆலோசனையில் செயலாளர்கள் தெரிவித்த ஒரு சில விஷயங்களால் ரஜினிகாந்த் ஏமாற்றம் அடைந்ததால் இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டது/

இந்நிலையில் நாளை மீண்டும் ஒரு மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு நடக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் திடீரென அறிவித்துள்ளார்.  மீண்டும் அவர் சந்திப்பு நடத்த சில முக்கிய காரணங்கள் உள்ளதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி அவர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது , சென்ற கூட்டத்தில் தனக்கு அதிருப்தி அளித்த விஷயங்கள் குறித்த விளக்கம், மற்றும் அதிமுக அல்லது கமலஹாசனுடன் கூட்டணி குறித்து அவர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.