டெல்லி: நாட்டில் சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 30ம்  தேதி வரை அமலில் இருக்கும்.

ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே சுற்றுலா தலங்கள் அனைத்தும் மார்ச் 18ம் தேதி முதல் மூடப்பட்டன. அதன்படி தமிழகத்தில் தஞ்சையில் பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சை, மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. தமிழகத்தில் சுற்றுலா தலங்களாக சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் கால நினைவுச் சின்னங்கள் மட்டும் 600க்கும் மேற்பட்டவை உள்ளன.

சுற்றுலா தலமாக விளங்கும் கோவில்கள் மட்டும் 21 ஆயிரத்து 600 உள்ளன. இந்த சுற்றுலா தலங்களில் மட்டும் 360 பேர் வழிகாட்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.