தேனி: மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனியில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உ.பி. மாநிலம் ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் தேனி – போடி சாலையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்தனர்.  ஆனால், இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஆனால், நியாயமான போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் எதிர்ப்பை மீறி நடத்தவேண்டியிருக்கும் என கே.எஸ்.அழகிரியும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  , தேனி – போடி சாலையில்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே, போராட்டத்துக்கு டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த கே.எஸ் அழகிரி , நியாயமான போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தடையை மீறி டிராக்டர் பயன்படுத்தப்படும்,  போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கே.எஸ்அழிகிரி  வெளியிட்ட அறிக்கையில், ” மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று காலை 10 மணியளவில் தேனி – போடி சாலையில் நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு வருகிற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கொடியுள்ள வாகனங்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. டிராக்டர்களிலும் விவசாயிகள் வர முடியவில்லை. விவசாயிகள் கூட்டத்தை நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.இத்தகைய ஜனநாயக சட்டவிரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி கூட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று காவல்துறையினரை எச்சரிக்கிறேன்.

எனவே, மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் அமைதியான முறையில் சட்ட ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நடத்துகிற விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தும்படி தமிழக தலைமை காவல்துறை அதிகாரி திரு ஜே.கே.திரிபாதி அவர்களையும், தமிழக உள்துறை செயலாளர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி  அறிவித்தபடி, இன்று காலை 200-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்திற்காகத் திரண்டனர். ஆனால், அவர்களுக்குப் போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தொண்டர்களுடன்  கே.எஸ்.அழகிரி  சாலை மறியலில் ஈடுபட்டார். அவரையும் காங்கிரஸ் தொண்டர்களையும் போலீஸார் கைது செய்தனர்.